கச்சத்தீவு என்பது தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் ஆனது, நாடாளுமன்றம் மற்றும் தமிழகத்தின்  ஒப்புதல் பெறாமல் இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது,  

கச்சத்தீவை மீட்க தமிழக அரசு மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என பேராசிரியர் ராமுமணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தடையை மீறி சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலை உழைப்பாளி சிலையிலிருந்து ராமேஸ்வரம் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராமு மணிவண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு என்பது தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் ஆனது, நாடாளுமன்றம் மற்றும் தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது, இது சட்டப்படி செல்லாது என்றும் இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை அதனை ஏற்படுத்தும் விதமாகத்தான் இந்த நடை பயணத்தை மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளேன். தமிழக அரசு இந்திய அரசாங்கத்திற்கு முறையாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து கட்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கச்சத்தீவை மீட்காததால் மீனவர்கள் பலர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்,

சீனாவின் ஆதிக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து பேசிய அவர் தனி நபருக்கான கோரிக்கையாக கருதாமல் இது தமிழக மக்களுக்கான கோரிக்கையாக கருதியதால் தான் இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்வதாகவும் கூறினார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களிடையே தனிநபராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராமு மணிவண்ணனை தடையை மீறி பேரணிக்கு புறப்பட்டதாக கூறி காவல்துறையினர் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.