திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் கொங்குநாடு வரலாம்... வானதி சீனிவாசன் எச்சரிக்கை..!
கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தான் அமைச்சர் பதவியேற்றபோது 'கொங்கு நாடு' என தன்விவரக் குறிப்பில் இருந்தது ஒரு 'கிளரிகல் மிஸ்டேக்' என்று தெளிவுபடுத்தி விட்டார் மத்திய அமைச்சரான எல். முருகன். நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த எல்.முருகனின் சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதிலாக கொங்கு நாடு – தமிழ்நாடு என்று இடம்பெற்றிருந்தது.
இதனால் கொங்கு நாடு என்ற பதம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதப்பொருளாக மாறியது. இதனால் பெரும் சர்ர்சைகளும் வெடித்தன. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறதோ என்ற பார்வையில் திமுக ஆதரவாளர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் விரும்பினால் கொங்கு நாடு என்ற ஒன்றை உருவக்கலாம் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நிகழ்வில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கொங்குநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கொங்குநாடு குறித்து எந்த விவாதமும் வேண்டாம், அது Clerical mistake என்று பதில் அளித்துவிட்டார். கொங்குநாடு சர்ச்சை இத்துடன் முடிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் என பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அடுத்த விவாதத்திற்கு அடிப்போட்டுள்ளார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ’’தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எனவே வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி இம்மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலனை வரலாம்’’என தெரிவித்துள்ளார்.