தைரியம் இருந்தா என்னை கட்சியை விட்டு நீக்குங்க ….ஆவேசமான தங்கதமிழ் செல்வன் !!
அமமுகவில் டி.டி.வி.தினகரன் – தங்கதமிழ் செல்வன் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பேசிய தங்கதமிழ் செல்வன், தைரியம் இருந்தால் என்னை கட்சியைவிட்டு நீக்குங்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரனுக்கும் – தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் முற்றி வருகிறது. இதனால் தங்கதமிழ் செல்வன் அதிமுகவில் இணைய போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து கேள்விப்பட்ட தினகரன், அவர் பெரிய ஜாம்பவான், கட்சியை விட்டு வெளியேறச் சொல்லுங்கள் என்று காட்டமாக பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ் செல்வன், தனக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து மோதல் இருந்து வருவதாகவே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனாவிடம் தங்கதமிழ் செல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், அந்த ஆள பொட்டைத்தனமான அரசில் பண்ணுவதை நிறுத்தச் சொல் என தங்க தமிழ் செல்வன் கடுமையாக பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாம் அழிந்து போவீர்கள் என்றும், நீயும் அழிந்து போவாய் என்றும் கூறுகிறார்.
நான் தேனியில் என்ன மதுரை மாவட்டத்தில் கூட என்னால் கூட்டம் போட முடியும்.. அங்கும் உங்களை எதிர்த்து என்னால் அரசியல் செய்யும் என்று கொந்தளித்துள்ளார். பேடித்தனமாக அரசியல் பண்ண வேண்டாம் என்றும் அப்படி செய்தால் தோற்று விடுவார் என்றும் தங்க தமிழ் தமிழ் கடுமையாக பேசியுள்ளார்.
இந்நிலையில் ஆடியோவில் உள்ளது உங்கள் குரல்தானா ? நீங்கள்தான் அப்படி பேசினீர்களா ? என செய்தியாளர்கள் தங்கதமிழ் செல்வனிடம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், அது தன்னுடைய குரல்தான் என்றும், அதைப் பேசியது தான் தான் என்றும் கூறினார்.
அமமுகவின் நன்மைக்காக பர ஆலோசனைகளை தான் கூறினாலும், டி.டி.வி.தினகரன் அதை செல்படுத்துவதில்லை என்றும் தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதால் தான் அப்படி பேசியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தைரியம் இருந்தால் என்னை அமமுகவைவிட்டு நீக்குங்கள் எனவும் சவால் விடுத்தார். இதையடுத்து அமமுகவில் மோதல் முற்றி வருகிறது.