If Jayalalithaa was alive - Thamilisai
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினர் செய்திருக்கும் ஊழலைப் பார்த்து மலைத்துப்போயிருப்பார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் பன்வாரிலால புரோகித் ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான நகர்வுதான் என்று கூறினார். திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் இதனை தமிழகத்துக்கான அடுத்தகட்ட நகர்வாகத்தான் பார்க்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் எதிர்கட்சிகள் உண்மையாக இல்லை என்றும் அதனால்தான் ஆளுநர் ஆய்வை அவர்கள் விமர்சனம் செய்வதாகவும் கூறினார். குடியரசு தலைவர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார். ஆளுநர் ஆய்வை முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருந்து வந்தவர் அல்ல என்றார். அவர் காங்கிரசில் இருந்து வந்தவர் என்றும் ஆளுநர் நடவடிக்கை குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப்படவில்லை; ஆனால் கவலைப்பட வேண்டாதவர்கள் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இது போன்ற நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கூறுவதால் நிறுத்திவிட முடியாது. தமிழகத்தில் நேர்மையான முறையில் பாஜக கட்சியை பலப்படுத்தி வருகிறது. நாங்கள் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். ஆளுநரை வைத்து ஆள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினர் செய்துள்ள ஊழலைப் பார்த்து வியந்து போயிருப்பார். டிடிவி தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். தினகரன் போலி துணிச்சலில் பேசுகிறார் என்றும் தங்கள் மீது தவறில்லை என்றால் வருமான வரி சோதனை குறித்து ஏன் பதற்றப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அரசியலைத் தாண்டி தவறு செய்யும் அனைவரையும் வருமான வரி சோதனைக்கு உட்படுத்த
வேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருக்குமா என்று அதிமுக அம்மா துணை பொது செயலாளர் டிடிவி
தினகரன் கூறியிருந்தார். தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? ஜெ. இல்லாத தைரியத்தில் இப்படி ஆடுகிறார்கள்! அம்மா இல்லாததால் எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சு! என ஆளாளுக்கு ஜெயலலிதாவின் ஆளுமையை பேசி வரும் நிலையில், தற்போது, தமிழிசையும், ஜெயலலிதா இருந்திருந்தால், சசிகலாவின் குடும்பத்தினர் செய்துள்ள ஊழலைப் பார்த்து
வியந்து போயிருப்பார் என்று கூறியுள்ளார்.
