If I answer this growth of education sector will fade away - Minister sengottiyan ...

ஈரோடு

"ஆளும் அதிமுகவுக்கு அரசியல் தெரியாது" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொன்னது குறித்து கேட்டதற்கு "யார் யாரோ கேட்கின்ற கேள்விக்கு எல்லாம் நான் பதில் அளித்துக் கொண்டிருந்தால் கல்வி துறையின் வளர்ச்சி மங்கி போய்விடும்" என்று மழுப்பினார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அதில், "ஆசிரியர் நியமனத்தில் புதிதாக வரக்கூடிய ஆசிரியர்களுக்கும், 2013–ஆம் ஆண்டு வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும் எப்படி அதை பரிசீலிப்பது என்பது குறித்து அரசு கோப்புகள் நகர்ந்து கொண்டுள்ளது. மிக விரைவில் அதற்கான நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எங்கெங்கு இருக்கிறதோ அவை நிரப்பப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து நாம் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். பிளஸ்–1 பொதுத் தேர்வுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளில் தற்போது விடைத்தாள்கள் மாணவ–மாணவிகளுக்கு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆசிரியர்களுக்கும் கேள்வித்தாள்கள் எப்படி வருகிறது? என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

"தற்போது இருக்கும் அதிமுகவுக்கு அரசியல் தெரியாது" என்று முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது குறித்து கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, "யார் யாரோ கேட்கின்ற கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்வது வழக்கம் இல்லை. அவரவர்கள் ஏதோ கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் நான் பதில் அளித்துக் கொண்டிருந்தால் கல்வி துறையின் வளர்ச்சி மங்கி போய்விடும்" என்று அவர் தெரிவித்தார்.