விஜயபாஸ்கரை டெங்கு கொசு கடிச்சா தெரியும்... புகழேந்தி சொல்லும் புதுக்கதை!
கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான வழக்குரைஞர் புகழேந்தி நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக அரசின் செயலற்ற தன்மை இதுதான் என்று கூறி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
டெங்கு கொசுவால் குழந்தைகள் பலர் இங்கே உயிரிழந்து வருகின்றனர். டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு சரியான நடவடிக்கையை சுகாதாரத் துறை எடுக்கவில்லை. இப்படி நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, டெங்கு கொசு கடித்தால்தான் அதன் விளைவை அவர் உணர்வார் என்றார் புகழேந்தி.
அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாக சாடினார். இரட்டை இலைச் சின்னம் என்பது எங்களுக்கு வரலாற்றுச் சின்னம். அதை முடக்கியது பன்னீர்செல்வம் தான். அதிமுகவை தில்லியில் அடகுவைப்பதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்தவர்கள் நாங்கள்தான் என்கிறார் மனோஜ்பாண்டியன். இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறினார் புகழேந்தி.
அதிமுக., நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பிப் பயனில்லை. அதிமுகவுக்கு 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி நாடாளுமன்றத்தை முடக்கவில்லையே... ஏன்? என்று கேள்வி எழுப்பிய புகழேந்தி, இனி இவர்களை நம்பி பலனில்லை என்று கூறினார்.