மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு..! நீதிக்காக போராடும் பூரணசுந்தரி..!
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள முழுபார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள முழுபார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் பூரணசுந்தரி. வயது 25. பார்வை மாற்றுத்திறனாளியான இவர், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்றார். தொடந்து இத்தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்து வந்த பூரணசுந்தரி, கடந்த 2019ஆம் ஆண்டு நான்காவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து செப்டம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது. அதில், பூரணசுந்தரிக்கு இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூர்ணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ஓபிசி இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி தனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஓபிசி பிரிவில் தன்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிட வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், 2019ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடம் ஒதுக்கி மத்திய அரசு வெளியிட்ட பட்டியல், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அத்துடன், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. பூரணசுந்தரி சார்பில் வழக்கறிஞர்கள் பாஸ்கர் மதுரம் கண்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.