"டி.டி.வி.தினகரன் மூலம் தமிழகத்தில் எய்ம்ஸ் கொண்டு வருவேன்" - தோப்பு வெங்கடாசலம் உறுதி!!
அதிமுகவில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக உள்ளன. மேலும் தற்போது, டிடிவி.தினகரன் தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. இதனால், அதிமுகவில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில் அதிமுக அமைப்பு செயலாளர் தோப்பு வெங்கடாசலம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவரது கட்டுப்பாட்டில் சுமார் 18 எம்எல்ஏக்களை வைத்து, தனி கூட்டம் நடத்தி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடிக்கு வலு சேர்க்கும் விதமாக ஒத்துழைப்பு கொடுப்போம் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், டிடிவி.தினகரன் மூலம் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலு சேர்க்கும் விதமாக அனைவருக்கும், ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுவோம். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
டிடிவி.தினகரன் தலைமையில் அதிமுக செயல்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் கொண்டு வருவோம். அதுவே எங்களது முதல் திட்டம்.
அமைச்சர்கள் ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பல்வேறு விதமாக பேசி வருகின்றனர். அவர்கள் கூறுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் பெரியதாக நினைக்கவில்லை.