மிரட்டல், உருட்டல் இங்கு எடுபடாது.. நான் எதையும் சந்திக்க தயார்.. சசிகலாவுக்கு மறைமுகமாக சவால் விடும் முதல்வர்
சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 11 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுர்ழ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- அதிமுகவிற்கு செல்லும் இடமெல்லாம், மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும். எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சிக்குள் உள்ள பிரச்சனையை பற்றி பேசியது திரித்து வெளியாகியுள்ளது.
மேலும், பேசுகையில் அமமுக கட்சியில் இருந்து விலகி யாராவது இணைய முன்வந்தால் அதிமுக தலைமை அதை பரிசீலிக்கும். கட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும். அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நான் எதையும் சந்திக்க தயார். சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.
அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.நான் செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர். மீண்டும் அதிமுக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகை அதிமுக ஆட்சியில் தான் கிடைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை.
ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? மத்தியில் கூட்டணியில் இருந்த போது, திமுக எந்த நன்மையும் செய்யவில்லை. கொரோனா காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்கப்பட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.