ஐபிஎல் வன்முறை! CSK ரசிகனாக அதிருப்தி அடைகிறேன் தமிழனாக வெட்கி தலை குனிகிறேன்! பாடகர் ஸ்ரீனிவாஸ்
சகோதரர்கள் அன்பை மறந்து செய்த வன்முறையால் நான் ஒரு தமிழனாக வெட்கி தலைகுனிகிறேன் என சினிமா பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி யை முன்னிருந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டம் வெடித்தது. நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் IPL நடக்கவிருந்ததை எதிர்த்து அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இதனையடுத்து அடுத்து நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது; என் அணி முதல் இரண்டு போட்டிகளில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில் ஒரு சிஎஸ்கே ரசிகனாக அதிருப்தி அடைந்துள்ளேன். நம் கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ வைப்பது கலையும், விளையாட்டும். கேதர், பில்லிங்ஸ், பிராவோ ஜடேஜா சிறப்பாக விளையாடி நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றனர். இது தான் விளையாட்டு. என் சகோதரர்கள் செய்த காரியத்திற்காக நான் வெட்கி தலை குனிகிறேன்.
மனிதர்களாக, கலைஞர்களாக நான் விரும்பும் மக்களும் இந்த வன்முறைக்கு காரணம் என்பதால் வெட்கி தலை குனிகிறேன். ஒரு புலி வாலை பிடித்துவிட்டு அடுத்து என்ன நடக்கும் என்று உறுதி அளிக்க முடியாததால் ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன்.
சில சகோதரர்கள் அன்பை மறந்து செய்த வன்முறையால் வெட்கி தலை குனிகிறேன். முன்பு நடந்ததில் இருந்து பாடம் கற்காததால் வெட்கி தலை குனிகிறேன். வெட்கி தலை குனிகிறேன். காவிரி பற்றி உருப்படியாக பேசுவோம். தமிழகத்திற்கு இவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை கர்நாடகா ஏற்கவில்லை. இதில் தலையிட வேண்டிய மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தலையிடாமல் உள்ளது.
ஒரு இந்தியனாக வெட்கி தலை குனிகிறேன். இது பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளுமே பொறுப்பு. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவை தங்கள் நலனுக்காக மக்களை பகுதி, மொழி வாரியாக பிரித்துவிட்டன.
இது அரசியல்வாதி ஆடும் விளையாட்டு. அவர்களுக்கு வெட்கம் என்பதே இல்லை. அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக, கர்நாடக மக்கள் எப்படி தீர்வு காண முடியும் என்று தெரியவில்லை. அன்பு மட்டும் தான் ஒரே வழி. அரசியல் கட்சிகளை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.