கடந்த 75 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்திலிருந்து எந்தக் கட்சியிலும் ஓர் அமைச்சர்கூட வரவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

சென்னை தி. நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், “மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, ஏழை குடும்பத்தில் வளர்ந்து, இன்று இணை அமைச்சராக ஆகியிருக்கிறார் எல்.முருகன். தமிழகத்தில் அதிகம் பேசும் வார்த்தையாக சமூகநீதி உள்ளது. திராவிட கட்சிகள் சமூகநீதியைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஆனால், எல்.முருகனுக்கு பாஜக செய்ததை எந்த திராவிட கட்சிகளும் செய்து இருக்காது.


எல்.முருகனைப் பார்க்கும்போது சரியான கட்சியில்தான் நான் இருக்கிறேன். சரியான கட்சியில்தான் நான் தலைவராக இருக்கிறேன். இந்தியாவின் தலைமையாக சரியான கட்சிதான் உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்திலிருந்து எந்தக் கட்சியிலும் ஓர் அமைச்சர்கூட வரவில்லை. தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் 12 அமைச்சர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 8 அமைச்சர்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 28 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.