தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா..? அரசாணை வெளியீட்டில் தகவல்..!
தேர்தலுக்கு ரூ.618 கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக ரூ.126 கோடியும் செலவிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.744 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்றது. அதில், திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கோவிட் தொற்று பரவல் நேரத்தில் தேர்தல் நடத்தபட்டதால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுடன், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டுப்பதிவு மையத்தை தயார் செய்வது, ஓட்டு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியம் என தேர்தல் பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவானது.
கோவிட் பரிசோதனை, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு கை கிளவுஸ் போன்றவைகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவிடப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேர்தலுக்கு ரூ.618 கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக ரூ.126 கோடியும் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.