மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளர் சகாயமேரிக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவின் தந்தை முருகானந்தத்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு ஜாமின் கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதி காப்பாளர் சகாயமேரி மனு தாக்கல் செய்து இருந்தார். 

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுதலையானார். இவரை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த படம் தற்போது வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.