சென்னையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது. 

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.இந்நிலையில், கனமழையால் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும் 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.