ஆளுநரை அழைத்ததுக்கு அனுமதி இல்லை.. சாலமன் பாப்பையா, டிஜிபிக்கு ஒரு நியாயமா ? சீறும் ராம. ரவிக்குமார் !
தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆதினத்தை மனிதர்கள் சுமந்து செல்வதை ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நடக்க உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
பட்டின பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரரை கொடுத்தாவது தருமபுரம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். ஆதீனத்துடன் பேசி இரு சுமூகமான முடிவை அரசு எடுக்கும் என்று விளக்கமளித்தார். இதுகுறித்து தற்போது இந்து தமிழர் கட்சி தலைவர் ராம. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், ‘பட்டின பிரவேசம் என்பது பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் தாங்களாக மனமுவந்து ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் சுமந்துவரும் ஒரு பக்தி திருவிழா.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் திமுக அரசு பதவி ஏற்ற பின்னர் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆதினகர்த்தர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி தலைமையகத்திற்கு வரவழைத்து அவர்கள் மூலமாக ஆன்மீக அரசு என்று சொல்ல வைத்த ஆட்சியாளர்கள், அப்படி பாராட்டுப் பத்திரம் கொடுத்த தருமபுரம் ஆதினத்திற்கு செய்யும் மரியாதை இதுதானா ?
தர்மபுரம் ஆதினம் ஆன்மிக யாத்திரையின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநரை அழைத்து விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தான் இந்த பாரம்பரிய இறை நம்பிக்கை விழாவை நடத்த விடாமல் அச்சுறுத்தி மிரட்டி பார்க்கிறதா அரசு ? தமிழக டிஜிபி பணி ஓய்வு பெற்ற பிறகு அவரை காரில் உட்கார வைத்து கயிறு கட்டி காவலர்கள் இழுத்துச் செல்வது பாரம்பரிய சம்பிரதாய மரபு என்று சொல்லக்கூடிய அரசு, பக்தர்கள் தங்க குருமார்களை பட்டினப்பிரவேசம் பத்தி திருவிழாவில் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பாராட்டு தெரிவித்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து தூக்கி சுமந்ததை அரசு மறந்து விட்டதா? இல்லை அதற்கு தடைவிதித்தா ? மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது அடிமைத்தனம் என்று சொல்லக்கூடிய இவர்கள் பெற்றோர்களை சுமப்பது கூட சட்டவிரோதம் என்று கேட்டு மனு கொடுப்பார்கள் போல’ என்று கூறினார்.
இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!