தமிழகம் முழுவதும் இந்து உணர்வு.. ஆனால் ஓட்டாக மாறவில்லை.. துல்லியமா சொல்லும் துக்ளக் இதயா.
உள்ளாட்சித் தேர்தலை அளவுகோலாக வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜக பரவலாக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழகம் முழுவதும் இந்து உணர்வு, இந்து விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது ஆனால் அது வாக்காக மாறவில்லை, அதை மாற்றுவது பாஜகவின் கையில்தான் இருக்கிறது என மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான துக்ளக் இதயா தெரிவித்துள்ளார். இன்னும் கூடுதலாக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இன்னும் அதிக இடங்களை பாஜகவால் கைப்பற்றியிருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கால்பதிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அக்காட்சி எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் அவைகள் பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை, ஆனாலும் அதன் முயற்சி தீவிரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேவேளையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் அக்கட்சியால் பெற முடிந்தது. ஆனால் இடப் பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. அதிமுக-பாஜக பிரிவு திமுகவுக்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வழக்கத்துக்கு மாறாக அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்த பாஜக சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் 19 வார்டுகளில் அதிமுகவை 3-வது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது பாஜகவுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்பதுடன், அதிமுகவின் இடத்தை பாஜக கைப்பற்றி விட்டதோ என்ற கேள்வியை எழிப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக தனித்து போட்டியிட்டு மொத்தம் 309 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலை காட்டிலும் அதிகமாகும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 11 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது பாஜக. திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும் பாஜக வாகை சூடியுள்ளது.
மொத்தம் 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் 22 வார்டுகளில் பாஜக கால்பதித்துள்ளது. கடந்த 2011 ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 4-வார்டு களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 56 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது, குமரிமாவட்ட நகராட்சிகளில் 21 வார்டுகளிலும், தென்காசி மாவட்டத்தில் 12 வார்டுகளிலும், தேனி மாவட்டத்தில் 4 வார்டுகளிலும், ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டங்களில் தலா 3 வார்டுகளிலும், ஈரோடு மாவட்டத்தில் 2 வார்டுகளிலும், கரூர், கிருஷ்ணகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. பேரூராட்சிகளை பொருத்தவரையில் 234 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதில் அதிகபட்சமாக 168 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கைப்பற்றியுள்ளது. சென்னையில் பாரதிய ஜனதா கட்சி 198 வார்டுகளில் போட்டியிட்டு 2 லட்சத்து 14245 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதாவது சென்னையில் 8.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மாநகராட்சியில் பதிவான வாக்குகளை விட பதிவாகாத வாக்குகளே அதிகம், மொத்தம் 43 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர், கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை, பெருமளவில் அத்தனைபேரும் வாக்களித்திருந்தால் அல்லது அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து சேர்ப்பதை பாரதிய ஜனதா சரியாக செய்திருந்தால், தென் சென்னை பகுதியிலும் மத்திய சென்னை பகுதியிலும் ஏன் வட சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அதனால் பெற்றிருக்க முடியும். தற்போது 40 சதவீத இடங்களுக்கு மட்டுமே பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் இன்னும் கூடுதலாக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் பட்சத்தில் கூடுதல் இடங்களை அது வென்றிருக்கும் என கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 19 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றியை பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சியின் வட சென்னை முதல் தென் சென்னை வரை வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. தென் சென்னைக்கு மட்டுமே உரிய கட்சியாக பாஜக பார்க்கப்பட்ட நிலையில் அதன் வெற்றி தற்போது பரவலாக இருக்கிறது. இதற்கு காரணம் பாஜகவின் இந்துத்துவ அரசியல், மற்றும் இந்து உணர்வு பரவலாக மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளதுதான் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் துக்களக் இதயா பேட்டி கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- உள்ளாட்சித் தேர்தலை அளவுகோலாக வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது அதேநேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜக பரவலாக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அவருடைய வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது, அதற்கு காரணம் தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு என்பது பரவலாக அதிகரித்திருக்கிறது, பரவலாக இந்துக்கள் பாஜக சொல்வது சரிதானே என்று பேசும் அளவிற்கு வந்திருக்கின்றனர். தமிழகம் முழுவதுமே இந்த உணர்வு மேலோங்கி இருக்கிறது, இஸ்லாமியர்கள் செய்வது தவறு தானே, ஹிஜாபை கழட்டி விட்டால் என்ன? என்று கேட்டும் அளவுக்கு பாஜகவின் வியூகம்தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. சாதாரண இந்து, பொதுமக்கள் மத்தியில் இந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கோட்பாடு அளவில் உள்ளே நுழைந்துள்ளது. ஆனால் அது வாக்காக மாறுமா என்பதுதான் சந்தேகம்.
பரவலாக அது இன்னும் வாக்கை பெற்றுத் தரவில்லை, வளர்ந்துவரும் இந்து உணர்வை வாக்காக மாற்றுவது பாஜகவின் கையில் தான் இருக்கிறது. எப்படி சாதி உணர்வு மேலோங்கியிருக்கிறமோ அதுபோல இந்து உணர்வும் அதிகமாகி இருக்கிறது. ஆனால் அவர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான். நடந்து முடிந்த தேர்தலில் 45% வேட்பாளர்களைதான் பாஜக நிறுத்தியது, ஆனால் முழுவதுமாக நிறுத்தியிருந்தால் கூடுதலாக அவர்கள் வாக்குகளை பெற்றிருக்க முடியும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.