ஜெ., போட்டோ சட்டசபையில இருக்கணுமா.. வேணாமானு மக்களே முடிவு செய்வார்கள் - தலைமை நீதிபதி அதிரடி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ படம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 12ம் தேதி சட்டசபையில் திறக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்தது சட்டவிரோதம். எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு சபாநாயகர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி சபாநாயகர் திறந்துவைத்துள்ளார் என்பதால் அதை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக எம்எல்ஏ தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால், காவல் நிலையங்களில் ரவுடிகளின் புகைப்படங்கள் வைக்கும் சூழல் ஏற்படும். சபாநாயகரின் உத்தரவு நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. இந்த வழக்கில் அரசியல் சாசன கேள்வி உள்ளது. அதற்கு இந்த நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும். அப்போது வரும் புதிய சபாநாயகர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளட்டும்; சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
மேலும், தனி மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதாலேயே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ'க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.