கிழிந்தது அரசின் முகத்திரை.. பணம் கொடுத்து பணியில் சேருவதா? அரசை அலறவிட்ட நீதிமன்றம்.. சபாஷ் யுவர் ஆனர்!!
பணம் கொடுத்து அரசு பணியில் சேர்பவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வைத்து பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இதேபோல ஆசிரியர் பணிகளுக்கு டிஆர்பி, டெட் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான பணிகள், பணம் வாங்கிக்கொண்டு நிரப்பப்படுவதாக நீண்ட காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் கூட பணி ஆணை வழங்க பணம் கேட்ட அவலங்களெல்லாம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அண்மையில் பாலிடெக்னிக் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
பத்திரிகைகளின் செய்தியை அடிப்படையாக கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை, தாமாக முன்வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தியது.
நீதிமன்றம் சரமாரி கேள்வி:
அப்போது, பணம் கொடுத்து அரசு பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? தமிழக அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது? என சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.