தமிழகத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சல்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?
தமிழகத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சல் யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை தொற்று, டெல்டா பிளஸ் வைரஸ் என அடுத்தடுத்து பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸால் கேரள- தமிழ் நாடு எல்லையான பாறசாலை பகுதியில் 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவரைத் தொடர்ந்து கேரளாவில் மேலும் 18 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சல் யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள 2,660 வீடுகள் தோறும் நேரில் சென்று பரிசோதித்து யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை. கேரளத்தில் இருந்து பேருந்து, ரயில் மூலம் தமிழகம் வருபவர்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
அனைத்து மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முதல்வர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கொரோனா மட்டுமில்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.” எனக்கூறினார். மேலும், “தமிழகத்தில் 3,929 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.