HC granted permission for dmk protest

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற தவறிய மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தபோவதாக கடந்த 20 ஆம் தேதி நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திமுகவின் மனித சங்கிலி போராட்டத்துக்கு காங்கிரஸ் மார்க்சிஸ்ட் - கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நாளை திமுக நடத்தும் மனிதசங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக திமுக மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது என்றும், இந்த போராட்டத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு - தனியார் நிறுவன பணிக்கு செல்வோர் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் திமுகவின் மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறியிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, திமுக மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராடினால் எவ்வாறு தடை விதிக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து திமுகவின் மனித சங்கிலி போராட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.