பலகோடி மோசடி செய்தவருக்கு பாஜகவில் பதவி.. அமர்பிரசாத் to அண்ணாமலை வரை அலறவிடும் சவுக்கு சங்கர்..
தமிழக பாஜகவில் ரவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தொடர்புடையவருக்கு விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பாஜகவில் ரவுடிகள் ?
பாஜகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ஏராளமான சமூக விரோதிகள் பாஜகவில் இணைக்கப்படுவதாக புகார் எழுந்தது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவில் இணைந்துள்ள ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டார். அதில் ரவுடிகளின் பெயர்களையும் அவர்கள் செய்த குற்றங்களையும் பட்டியிலிட்டார். இதனை மறுத்த பாஜக, பாஜகவில் ரவுடிகள் இல்லையென்றும் ஸ்டாலின் கூறிய ரவுடிகளின் பட்டியலில் பலர் திமுகவை சேர்ந்தவர்கள் என கூறியது. இந்த நிலையில் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்த ஒருவருக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கே.ஹரிஷ் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 % முதல் 30 % வரை மாதந்தோறும் வட்டி தருவதாக விளம்பரம் படுத்தியுள்ளார். இதனை நம்பி ஏராளமானோர் தங்களது பணத்தை டெபாசிட் செய்தனர். மேலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங், பிட்காயின் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது லாபகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மோசடி செய்தவருக்கு மாநில செயலாளர் பதவி
இந்த நிறுவனத்தின் மீது தற்போது பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வருமானமும் இல்லாமல் ஹரிஷ் பெயரில் ரூ.150 கோடி சொத்து உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடுத்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் ஹரீஷ் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஹரீஷ் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்த நிலையில் பாஜக தலைமை ஜூன் 2 ஆம் தேதி விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ஹரீஷ்க்கு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை பணத்தை ஏமாற்றியதாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்த ஒருவருக்கு இரண்டு வாரங்கள் கழித்து பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாளிதல் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பாஜக விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் எஸ் அமர் பிரசாத் ரெட்டி, இந்த சம்பவம் அரசியல் பழிவாங்கல் என தெரிவித்தார். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு விளையாட்டு வீரர்களை ஒன்று திரட்டியதால் அவர் மீது ஏற்பட்ட அரசியல் விரோதத்தில் பழிவாங்கப்படுவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஹரீஷை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றும், அவர் இதுவரை கட்சி பதவியை ஏற்கவில்லையென தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக ஹரீஷ் விளக்கம் அளித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பணம் கொடுத்து பதவி
இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர், ஜனவரி 1, 2020 முதல் 30 ஏப்ரல் 2022 வரை, ஹரிஷிடம் மொத்தம் ரூ. 1100 கோடியை அவரது நிறுவனத்தின் கணக்கில் சட்டவிரோதமாக டெபாசிட் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்தப் பணம் 82 வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டு, பின்னர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள மொத்தத் தொகை 1,678 கோடி என்றும், இதுவரை 1414 கோடி ரூபாய்க்கு போலீசாரிடம் கணக்கு காட்டியுள்ளனர். 200 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லையென சவுக்கு சங்கர் கூறியுள்ளார். மேலும் ஹரிஷ் பெயரில் ரூ.150 கோடி சொத்து உள்ளது. ஆனால், இதை சம்பாதிக்க ஹரீஷ்க்கு வருமானம் இல்லையென்று தெரிவித்தார். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, ஹரிஷுக்கு உதவிவருவதாகவும் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு பெரிய தொகையைப் பெற்றுக் கொண்ட பின்னர் தான் ஹரிஷ்க்கு மாநில அளவிலான பதவியை வழங்கியதாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்
OPS vs EPS : 12 மணி வரை கெடு கொடுத்த இபிஎஸ்..! 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஓபிஎஸ்