கைப்பற்றிய நிலத்தை உடனே விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்.. எட்டு வழி சாலை விவகாரத்தில் திருமாவளவன் அதிரடி..!!
மத்திய அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அதை செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சென்னை சேலம் எட்டு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற மன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களது பெயருக்கு மாற்றி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அதை செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. மத்திய அரசு விரும்பினால் மீண்டும் புதிதாக ஒரு அரசாணையை பிறப்பிக்கலாம் அதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதியை அது தரவேண்டும் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைப்பது மட்டுமின்றி, மீண்டும் அங்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ள கூடாது. எட்டுவழிச்சாலை உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுடைய நிலத்தை மத்திய அரசு அவர் விற்ப்பதற்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.