கருணாசை அரெஸ்ட் பண்ணிட்டீங்க… அப்ப ஏன் இன்னும் எச்.ராஜாவை அரெஸ்ட் பண்ணலை எனும் குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளதால், எச்.ராஜாவை கைது செய்ய டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இபிஎஸ் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பல்வேறு சாதிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து போலீசார் அவர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நீதிமன்றம் குறித்தும், போலீசார் குறித்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேவலமாக பேசினார். மேலும் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் குறித்தும் அவர் அவதூறாக பேசினார்.
இதையடுத்து எச்.ராஜா மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது தமிழத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாசுக்கு ஒரு நீதி..எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? என எதிர்கட்சிகள் பொங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மத்திய அரசால் காப்பாற்றப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆளும் அதிமுக அரசு கடும் குழப்பத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து சீனியர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த ராஜா எது வேண்டுமானாலும் பேசுவார்? நாம் சும்மா இருக்க முடியுமா ? என அமைச்சர்கள் கொந்தளித்துள்ளனர். இந்த விஷயத்தில் பொது மக்கள் தமிழக அரசை கேவலமாக பேசுகிறார்கள்.. ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என அவர்கள் வற்புறுத்தினர்.

இதைத் தொடர்ந்து எச்.ராஜாவை கைது செய்ய டெல்லியில் இருந்து அனுமதி வாங்கும் பொறுப்பை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் வழங்கியுள்ளார் எடப்பாடி. தற்போது டெல்லியிடம் இருந்து கீரீன் சிக்னலுக்காக வெயிட்டிங்…
