இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.
கங்கை நீர் எது.? சாக்கடை நீர் எது.? என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தானே தவிர ஆடிட்டர் குருமூர்த்தி அல்ல என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். இதில் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அது திடீரென மாற்றம் செய்யப்பட்டு, நட்டா கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் திமுகவை விலக்க பாஜக என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறது என வாசகர் ஒருவருக்கு குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வீடு பற்றி எரியும்போது கங்கைநீர் வரட்டுமென காத்திருக்க முடியாது, சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும் என்றார். இதையே நான் திமுகவை விலக்குவதற்கான பதிலாக சொல்கிறேன். அப்படித்தான் சசிகலாவாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி வீட்டை அணைக்க கங்கை நீருக்காக காத்திருக்க முடியாது என பேசினார்.
அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குருமூர்த்தி சாக்கடை நீர் என்று சொல்வது சசிகலாவையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அவர், ச சிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொண்டு திமுகவை எதிர்க்க வேண்டும் என கூறியிருந்தார். மொத்தத்தில் அவரின் பேச்சுக்கு அதிமுக, அமமுக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கடுமையாக எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு:
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
ஆனால் அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் திரு. குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல. துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.