குருமூர்த்தி சொன்னது அவரோட சொந்த கருத்து...! ஆனா அதுதான் உண்மை! தமிழக மக்களை வெச்சு குழப்பும் தமிழிசை!
பாஜகவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குருமூர்த்தியின் கருத்து என்றும், ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்தார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குருமூர்த்தி அவர்களின் கருத்து என்றார்.
ஒரு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்ற வகையில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு கழகங்களும் இல்லாத ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார். இரு கழகங்கள் இல்லாமல் தேர்தலை பாஜக சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது எங்கள் முன் இருக்கும் சவால், கட்சியைப் பலப்படுத்துவதுதான். அதில்தான் இப்போது ஈடுபட்டுள்ளோம். ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இ8ணைந்து செயல்படுவது வேறு என்றார்.
ரஜினி இப்போதுதான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். இனி கட்சி தொடங்கி அவரது செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். எனவே தற்போது கூட்டணி பற்றி எதுவும் சொல்ல முடியாது. அது தேர்தல் நேரத்தில், கட்சியை பலப்படுத்த ஒவ்வொரு கட்சியும் அமைக்கும் வியூகத்தை பொறுத்தது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.