பாஜக.,வும் பங்குச் சந்தையும்..! ஏறி இறங்கி... பலரின் வயிற்றில் புளியைக் கரைத்து...
ஒரு மாநிலத் தேர்தல் முடிவுகள், நாட்டின் ஒட்டு மொத்த பங்குச் சந்தையை ஆட்டம் காணச் செய்து விடுமா? ஆனால் அப்படி நடக்கிறது இங்கு!
எல்லாவற்றுக்கும் காரணம் குஜராத் மாநில தேர்தல் முடிவுகள்தான். குஜராத் மாநிலம் வணிகர்கள் நிறைந்தது என்பதுடன், நாட்டின் வணிக ரீதியான முடிவுகள் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தே இருப்பதும் ஒரு காரணம்.
டிச.18 இன்று காலை குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல், பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. குறிப்பாக, ஹிமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகள் பெரிதும் பங்குச் சந்தையைப் பாதிக்கவில்லை. காரணம் அங்கே காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்து, பாஜக., பெரும்பான்மை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.
ஆனால், குஜராத் மாநில தேர்தல் முடிவுகள், பங்குச் சந்தையை காலையில் பதம் பார்த்தன என்றுதான் சொல்ல வேண்டும். பாஜக.,வுக்கும் காங்கிரஸுக்கும் சரி சம வாய்ப்புகள் இருந்த போது, பங்குச் சந்தை கொஞ்சம் டல்லாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் முன்னிலை நிலவரத்தில் காங்கிரஸ் வந்தபோது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெகுவாகக் குறைந்தது. 850 புள்ளிகள் வரை குறைந்த பங்குச் சந்தை குறியீட்டு எண், பின்னர் பாஜக., முன்னிலை பெறத் துவங்கியதும் சிறிது சிறிதாக மேல் ஏறத் துவங்கியது.
காலை 10.30 மணி நிலவரப் படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32,595 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10,074 புள்ளிகளாகவும் முன்னேற்றம் கண்டன.