குஜராத் வெற்றியை குதூகலமாய்க் கொண்டாடும் பாஜக.,வினர்... தில்லியில் களைகட்டிய உற்சாகம்!
குஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தில்லியில் உள்ள பாஜக., தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தில்லி தொடங்கி, நாட்டின் பல பகுதிகளில் குஜராத் வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர் பாஜக., தொண்டர்கள். தெருக்களில் கூடி, இசைக் கருவிகளை இசைத்து, ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் 1998க்குப் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக, பாஜக., அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் போது தொடர்ந்து பாஜக.,வே முன்னிலையில் இருந்துள்ளது. இது பாஜக.,வின் மிகப் பெரிய சாதனை என்றே கருதப்படுகிறது.
இந்த முறை, குஜராத்தில் மோடி போட்டியிட வில்லை என்றாலும், அவர் தன் மாநிலம் என்பதால் கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது தீவிர பிரசாரத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்றே பாஜக., தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் குஜராத் வெற்றிய பாஜக., தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி நகரில் உள்ள பாஜக., அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் 108 இடங்களுக்கும் மேல் பாஜக., முன்னிலை பெற்றுள்ளதால், அங்கே கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.