இவர்களது தவறு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி... சாட்டையை சுழற்றும் அமைச்சர் மூர்த்தி.!
பதிவுத் துறையைப் பொறுத்தவரையில் புதிய வணிகர்களாக இருந்தாலும் சரி தனியார் மற்றும் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி கடன் பெற நேரடியாக பதிவு அலுவலகம் செய்ய வேண்டியது இருந்தது. அது இனிமேல் செல்ல வேண்டியது அவசியம் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் விளை நிலங்களை மனைகளாகவும், மனை நிலங்களை விளை நிலங்களாகவும் மாற்றியது உள்பட பத்திரப்பதிவில் பல ஆயிரம் கோடிக்கணக்கான சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பதிவுத் துறையைப் பொறுத்தவரையில் புதிய வணிகர்களாக இருந்தாலும் சரி தனியார் மற்றும் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி கடன் பெற நேரடியாக பதிவு அலுவலகம் செய்ய வேண்டியது இருந்தது. அது இனிமேல் செல்ல வேண்டியது அவசியம் இல்லை. வங்கிகளில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அதிமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 2016ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படும். பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்து, அது உண்மை என்று நிரூப்பிக்கப்பட்டால், சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டு வரப்படும்.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் காரணமாகவே இந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று கூறினார்.