govt take action against Sterlite industry
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸ் காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் தமிழகமே குலுங்கியது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷ வாயு கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மக்கள் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போராடிய மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது என்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தோர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும் அரசு ஏற்பாடு செய்யும் என முதல்வர் கூறியுள்ளார்.
