பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் வேறில்லை.! அறியாமையால் புதிய கல்வி கொள்கையை சிலர் எதிர்கின்றனர்-ஆர்.என்.ரவி
இந்தியாவின் இலக்கை அடைய ஐந்து மந்திரங்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும் என தெரிவித்துள்ளார்.

நேரத்தை வீணாக்க கூடாது
சென்னை இராயப்பேட்டையில் தனியார் பள்ளியின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூமியில் பாரதம்(இந்தியா) மட்டுமே உலகில் அனைவரும் ஒன்று என்கிற பார்வையை கொண்டது. உலகத்திற்கு ஒற்றுமையை உணர்த்த கூடிய சகோதரத்துவமும், மனிதநேயமும் பாரத்திலிருந்து(இந்தியா) தோன்றியது. பாரதத்தின் உன்னதமான பாதையை உலகத்திற்கு காட்ட நம் பாதையை தொடர தவறிவிட்டோம். தற்போது அந்நிலைமை வலிமையான புதிய தலைமை உள்ளதால் சீரடைந்து வருகிறது. இனி நாம் நேரத்தை வீணாக்க கூடாது, அடுத்த 25 ஆண்டுகளில் உலகை மகிழ்சியான உலகமாக கொண்டு செல்லும் கடமை இந்தியாவிற்கு உள்ளது.
5 மந்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும்
என்னைபொருத்தவரை பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் வேறில்லை வாழ்க்கைக்கான அனைத்தும் அதில் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகும் காலணி ஆதிக்க ஆங்கிலேயே கல்வி முறை இந்தியாவில் தொடர்ந்தது.புதிய கல்விகொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை அறியாமையால், படிக்காமல் புதிய கல்விகொள்கையை எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும். இந்த இலக்கை அடைய 5 மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். முதலில் நாம் முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்கிற இலட்சியம் கொள்ள வேண்டும். இரண்டாவது காலணியாதிக்க மனநிலையிலிருந்து வெளியேற வேண்டும். ஆங்கிலேயே ஆட்சி மகிழ்வானது என்று உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுகின்றனர் இது பரிதாபத்திற்குரியது.
புதிய கல்வி கொள்கை அவசியம்
ஜனநாயகத்திற்கு ஆப்ரகாம் லிங்கனை உதாரணம் காட்டுகின்றனர் அவருடைய காலத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக பெண்களுக்கு இந்தியா அதிகாரமும், சுதந்திரமும் அளித்து வருகிறது. மூன்று, நம் பாரம்பரியம் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும். புராதாண சின்னங்கள் நாம் யார் என்பதை காட்டுகிறது அதனை பேணி போற்றிட வேண்டும். நான்கு, நம் ஒவ்வொருவருக்கும் நாட்டின் வளர்ச்சியின் மீதுள்ள கடமையை நிறைவேற்ற வேண்டும். இறுதியாக நாம் அனைவரும் ஒற்றுமையாக வேண்டும். ஆங்கிலேய காலத்தில் இருந்து பிரிவினை மேலோங்கியது அது இனம்,மதம் என தற்போதும் தொடர்கிறது அதனை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்