governor purohit in coimbatore campaign swach abiyan

கோவையில் முகாமிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று இரண்டாவது நாளாக கோவை மாநகரில் ஆய்வு செய்தார். கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

சாலையில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஈடுபட்டதைக் கண்டு பலரும் ஆச்சரியப் பட்டனர். அதிகாரிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் உடன் உதவினர். குறிப்பாக, பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தும் ஆளுநருடன் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்தார். 

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும். 

கோவை மாவட்டம் 89.23% கல்வியறிவு பெற்றுள்ளது, இது தேசிய சராசரியை விட அதிகமாகும். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன. 

அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்று அவர் கூறினார். 

நேற்று கோவைக்கு பல்கலை பட்டமளிப்பு விழாவுக்காக வந்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோவை மாநகர் நிர்வாகப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவரது ஆலோசனைக் கூட்டம் நேற்று தமிழக அரசியல் மட்டத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக அவரது அதிரடி தொடர்ந்தது.

இதனிடையே ஆளுநரின் இந்த அதிரடி ஆக்சன்களுக்கு அரசியல்மட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநரைக் கண்டித்து அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், அந்த தொகுதி எம்பி., எம் எல் ஏ., வுக்கு அழைப்பு இல்லாமல் என்ன கூட்டம் நடத்தப்படுகிறது, ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்போ மனுஷனை கடிக்க வந்திருக்கு பாஜக., என்று விமர்சனங்களை முன்வைக்கின்றனர் சமூக தளங்களில். 

பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு. ஆனால் மாநிலங்களில் அன்றாட விஷயங்களில் தலையிட அதிகாரமில்லை. ஆனாலும் ஒரு வேலை ஒத்திகையாக இருக்கலாம். ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி வந்தால் என்ன செய்ய வேண்டும் என இப்போதே ஒத்திகை பார்க்கிறார் போலும் என்றும் கருத்துகள் உலா வந்தன. 

இருப்பினும், ஆளுநரின் அதிகாரம் - அதிகாரிகளிடம்தான். அதிகாரிகள், மத்திய தேர்வு ஆணையம் மூலம் தேர்வாகி, மாநிலப் பணிகளுக்கு அனுப்பப் படுகின்றனர்.
அவர்களிடம் நிர்வாகம் குறித்து, அல்லது சிக்கல்கள் குறித்து கேட்டறிதல், பிரச்னைகளை ஆலோசித்தல் அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புதல், அல்லது நிர்வாகத்துக்கான ஆலோசனைகளைக் கூறுதல், உத்தரவுகளாக அல்லாமல் என்றும் இந்த அதிகாரம் இருப்பதால்தான் அவர் ஆளுநர் என்றும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் கட்சி சார்புடையவர்கள். அவர்களிடம் ஆளுநர் நேராக அழைத்து விசாரிக்க இயலாது. முதலமைச்சர் முன்னிலை இன்றி. அவர்களுக்கு முதல்வரே தலைவர். அரசியல் சார்பு வேறு... அதிகார மட்டம் வேறு...! என்றும் காரசார விவாதங்கள் இப்போது சமூக தளங்களை ஆக்கிரமித்துள்ளன. எல்லாம் ஆளுநரின் திடீர் அதிரடிகளே காரணமாகிப் போனது. இப்போது கிரண்பேடி ஸ்டைலில் புரோஹித்தும் களம் இறங்கியுள்ளார்.