governer visit to coimbatore
கோவை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை , தூய்மைப்பணி, பல இடங்களில் ஆய்வு என அதிரடியைக் கிளப்பி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் அடுத்தடுத்த மாவட்டங்களிலும் விசிட் அடித்து ஆய்வு செய்யப்போவதாக அமைச்சர்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
ஆளுநரின் இந்த ஆய்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அள்ளி அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் , தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் கோவை பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் மற்றும் கழிப்பறைகள் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும என்றும் கோவையைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் விசிட் அடித்து ஆய்வு செய்யப்போவதாக கூறினார்.
மேலும், நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தெரிநிது கொள்ள முடியும் என அமைச்சர்களுக்கு பீதியை கொடுத்தார்.
