ஆசிரியர்களுக்கு இனி இரண்டு வேளை அட்டெண்டன்ஸ் !! நாளை வேலைக்கு வராட்டி சம்பளம் கட்!!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு வேளை வருகை பதிவு செய்யப்படும் என்றும் நாளை வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் அறிவித்துள்ளார்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில அமைப்புகள் களத்தில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு பெரும் முயற்சி செய்து வருகிறது, ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்று 95 சதவீதத்தினர் இன்று பணிக்கு திரும்பி விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சில அறிவிப்புகளை வெளியிட்டுளளார். அதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
ஊழியர்களின் வருகைப்பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலை 10:30 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் காலை, மாலை என 2 வேளைகளில் வருகையை உறுதிப்படுத்த கையெழுத்திட வேண்டும் என்றும் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.