ஜெ. பாணியில் செயல்படும் தி.மு.க. எம்.எல்.ஏ... ! ஒருகோடி கேட்டு வக்கீல் நோட்டிஸ்
தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட்த்தில் பங்கு பெற்று போலீஸாரால் கைது செய்யபட்டும் உள்ளார். இந்நிலையில் அவரைப்பற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவனுக்கு கான்ட்ராக்ட் இருப்பதாகவும், 600 லாரி ஓடுகிறது எனவும், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் மருமகனுக்கும் கான்ட்ராக்ட் உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் மீடியாக்களிடம் சில நாள்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இப்புகார் குறித்து எம்.எல்,ஏ கீதாஜீவன் ”அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரம் இல்லாமல் என்மீது பொய்ப் புகார் பரப்பிவருகிறார். ஸ்டெர்லைட் ஆலையில் எனக்கோ, என் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்வித கான்ட்ராக்ட்டும் இல்லை. ஒரு லாரி கூட ஓடவில்லை. இதை அவர் நிரூபித்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என பதிலளித்தார்.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.எல்.ஏ., கீதாஜீவன் தனது வக்கீல்மூலம் அளித்துள்ள நோட்டீஸில், கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் பதவி வகித்துவருகிறார். தமிழக முன்னாள் அமைச்சரான இவரது சேவையைப் பாராட்டி, பொதுமக்கள் அவரை 2-வது முறையாக எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தனக்கென்ற செல்வாக்குடன் அவர் திகழ்ந்துவருகிறார்.
அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகப் பொய்யான தகவலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்நோக்கம்கொண்டு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகத் தொடர்ந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ., போராடிவருகிறார். கடந்த மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அமைதியாக ஊர்வலமாகச் சென்று தனது எதிர்ப்பு நிலையை பதிவுசெய்துள்ளார். அவர், அந்தத் தொழிற்சாலைக்கு என்றும் ஆதரவாகச் செயல்பட்டதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவதூறாக பேசியதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மேலும் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னைப்பற்றி யார் என்ன பேசினாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை தன் பாணியாக வைத்திருந்தவர். இப்போது திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் அவரை ஃபாலோ பண்ணுகிறார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.