ஊரடங்கை மேலும் கடுமையாக்க திட்டம்? மே 22ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மே 22ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மே 22ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொத்து கொத்தாக கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மே 29, 30ம் தேதிகளில் பலமடங்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அண்மையில் நியமித்தது. இதில், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக சார்பில் ஏழிலன், காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம், பாமக சார்பில் ஜி.கே. மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வரும் 24ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், ஊடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.