குட் நியூஸ்.. தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம்.. மாஸ் காட்டும் அமைச்சர் மா.சு..!
தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளோம். இந்தியாவில் முதன்முதலாக கோவையில் தொடங்கப்படவுள்ள திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜிகா வைரஸ் மற்றும் கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக, தமிழக - கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச்சாவடி பகுதியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. புதிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஜிகா வைரஸ் தாய்மார்களை பாதித்து வருகிறது. தமிழகத்தில் தேவைக்கேற்ப கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புப் பணியில் 21 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் 14,833 வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளோம். இந்தியாவில் முதன்முதலாக கோவையில் தொடங்கப்படவுள்ள திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தனியாருக்கு தடுப்பூசி முறைகேடாக விற்பது குறித்து நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தனியாருக்கு வாங்கப்படும் 25 சதவீத கொரோனா தடுப்பூசிகளையும் அரசுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் இடங்களில் கட்சித்தலையீடு இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தடுப்பூசியை பொருத்தவரை சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது கோவைக்கு இதுவரை 10,97,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.