அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி… முதலமைச்சர் அதிரடி உத்தரவு !!
பருவமழை பொய்த்துப் போன காரணத்தினாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக அரிசி வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர் கந்தசாமி தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை, அதிகாரிகள் பங்கேற்ற ஆசோலனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு ஏற்கனவே முடிவெடுத்தபடி 12 மாதம் இலவச அரிசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விவசாயம் பொய்த்து போய் உள்ளதால் அரசு சார்பில் மாதம் மாதம் அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே சிவப்பு அட்டைதார்களுக்கு 12 மாதம் அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தரமான அரிசி விரைவில் மாதந்தோறும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கவும், அனைத்து தொகுதிகளிலும் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் விரைவில் அரிசி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள பாண்லே பாலகத்தில் வழங்கப்படும் பிளாஸ்டிக்காலான பால்பாக்கெட்டுகளை தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பாண்லே நிறுவனமே பெற்றுக்கொள்ளும் என அமைச்சர்,தெரிவித்தார்.
அமைச்சரவை அலுவலகத்தில் தேநீருக்காக அதிக நிதி செலவிடப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்தது குறித்த கேட்டதற்கு, தங்களை சந்திக்க வரும் பொதுமக்களுக்காகத்தான் தேநீர் வழங்கப்பட்டு வருதாகவும், ஆளுநர் குற்றச்சாட்டுக்கு மக்கள் பதில் கொடுப்பார்கள் எனவும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.