அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் கொடுக்கும் தமிழக அரசு! டெண்டர் விடும் பணி ஆரம்பம்!
மலை வாழிடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு இன்னல்களுக்கிடையேதான் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதி, சாலை வசதி உள்ளிட்டவை இன்றி அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இன்றியும் பள்ளி நடைபெற்று வருவதாக அம்மக்கள் கூறி வருகின்றனர்.
பல கிலோ மீட்டர்கள் தூரத்தை கடந்து சென்ற பிறகு, மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மலை வாழிடங்களில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மலைவாழிடங்களில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ரெயின் கோட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 3.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மலைவாழ் மாணவர்களுக்கு விரைவில் இலவச ரெயின்கோட் வழங்கப்படும் என்றும் இதற்காக தமிழக அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.