“அமமுக கலைப்பு.. அதிமுக இணைப்பு.. சசிகலா ரிட்டர்ன்ஸ்..” சசிகலாவின் புதிய அஸ்திரம் ! என்ன செய்வார் எடப்பாடி ?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தக்கூடாது என்று முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ரத்து செய்ய முடியாது, வேண்டும் என்றால் தேர்தல் முடிந்த பிறகு எதாவது முறைகேடு நடைபெற்று இருந்தால் வழக்கு கொடுக்கலாம் என்று அறிவுரை வழங்கியது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்புமனு வாங்க வந்த ஓமப்பொடிக்கும், புகழேந்தி ஆதரவாளர்களுக்கும் தர்ம அடி கொடுத்து விரட்டினர் அதிமுக நிர்வாகிகள். இது சலசப்பை உண்டாக்கியது. இந்நிலையில் நேற்று சசிகலா வெளியிட்ட அறிக்கை அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போது தான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும். எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஓழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.
ஓமபொடி பிரசாத் சிங் புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர். அதுமட்டுமல்ல பிரசாத் சிங் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்த பின்னர் திருமணம் செய்து கொண்டவர்.
மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் பிரசாத் சிங், முசிறிப்புத்தன் ஆகியோரை திமுகவினர் தாக்கியதை பார்த்தவுடன், திமுகவுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார்.இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.
தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன்.ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும்’ என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள். அதிமுக வட்டாரத்தில் திருப்பங்கள் இன்று நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ‘நேற்று சசிகலா வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள்,அதனால் தான் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர் போலீசார்.
இது தொடர்பாக நேற்று மாலை தினகரனை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தினகரனின் அமமுக கட்சி இருப்பதால் அதிமுகவுக்குள் எளிதாக நுழையமுடியவில்லை; ஆகையால் அந்த கட்சியை கலைக்கும் அறிவிப்பை தினகரன் வெளியிட வேண்டும் என சசிகலா கூறியிருந்தாராம். ஆனால் அதனை தினகரன் ஏற்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்தார் சசிகலா என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் திடீரென தினகரனை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சசிகலா.
இதில் அமமுக கலைப்பு, அதிமுகவில் இணைவது,நினைவு நாளில் என்ன செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும்.இதுதான் சரியான நேரம். அம்மாவின் நினைவு நாளில் கெத்து காட்ட வேண்டும். நான் தான் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும்.அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.நான் சொல்வதை சரியாக செய்தாலே அதிமுகவை எளிதாக கைப்பற்றிவிடலாம்’ என்று டிடிவி தினகரனுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் சசிகலா என்று கூறுகின்றனர்.