பாஜக கூட்டணி உறுதி.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமரீந்தர் சிங்…பஞ்சாப் ட்விஸ்ட் !
பாஜகவுடன் கூட்டணி உறுதி என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே உள்ள உரசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விளக்கினார் அமரீந்தர் சிங். ‘காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன். இனி மேலும் இந்தக் கட்சியில் தொடர முடியாது’ என்று கூறினார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, முதன்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார்.
இவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர் ஆவார். ‘ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எனது குழந்தைகள் போன்றவர்கள். அவர்கள் சிறிது அனுபவம் இல்லாதவர்கள். அவரது ஆலோசர்கள் அவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என்பது, அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக வெற்றி பெறாது.
இரண்டு இலக்கங்களில் நிச்சயம் தொகுதிகளை வெல்ல முடியாது. 10 தொகுதிகளை கூட வெற்றி பெற முடியாது’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார் அமரீந்தர் சிங். பிறகு டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு, அமித்ஷாவுடன் சந்திப்பு என பாஜக வட்டாரத்தில் தொடர்ந்து சந்திப்புகள் நடந்து வந்தது. பிறகு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை துவங்கினார்.
தற்போது பேசிய அவர், ‘பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடும். இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.பாஜக மட்டுமல்லாமல் கூட்டணியில் இணையும் அகாலி தளம், சம்யுக்த் கட்சியுடனும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க உள்ளோம். இப்போதைக்கு வேறு எதையும் என்னால் கூற முடியாது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் சேர்ந்து முடிவு எடுக்கும்’ என்று கூறி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்ற வதந்தியை உறுதி செய்திருக்கிறார் அமரீந்தர் சிங்.