பணத்தை வைத்து சாதிக்க நினைக்கிறார் சசிகலா..! அதிமுகவில் இடம் இல்லை,பாஜகவிற்கு செல்லட்டும்- ஜெயக்குமார்
சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை,கூடிய விரைவில் அமமுக என்ற கட்சி இருக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பில்டப் ஆட்சி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. அதற்க்கு ஏற்றார் போல் விரைவில் அதிமுகவின் தலைமையை தான் ஏற்பேன் என சசிகலா கூறி வருகிறார். ஆனால் இதற்க்கு வாய்ப்பே இல்லையென அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து அறநிலையத்துறை என்பது ஒரு புனிதமான துறை என்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பான முறையில் இந்து அறநிலையத்துறை செயல்பட்டதாகவும் இப்போது பில்டப் விளம்பரம் செய்யப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறையில் ஆக்க பூர்வமான விஷயங்கள் நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.அதை மீட்டு விட்டேன் இதை மீட்டு விட்டேன் என்று சொல்லும் பத்திரிகையில் ஒரு மேனியாக தான் அமைச்சர் இருக்கிறார் என்றும் இந்த அரசும் அது போல தான் உள்ளது எனவும் உண்மையிலேயே இந்து அறநிலையத்துறை ஆதினமே இன்றைக்கு குறை சொல்லும் அளவிற்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.
சசிகலாவிற்கு ஒரு போதும் இடம் இல்லை
திரைப்படத்தில் வடிவேல் சொல்வதுபோல் திரும்பத் திரும்ப பேசுகிறார் என்ற டயலாக்கை சசிகலாவிற்கு கூறிய அமைச்சர் சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்றும் பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சிசகலா நினைக்கிறார் என்றும் டெல்லி உயர் நீதிமன்றமும் எலக்சன் கமிஷனும் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும் சசிகலாவின் கருத்திற்கு தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை என தெரிவித்தார். சசிகலாவின் பேச்சு பெரிய அளவில் எந்த தாக்கமும் ஏற்படாது என தெரிவித்தார். அமமுகவில் இருந்து பலர் அதிமுகவில் வந்து இணைந்து வருவதாகவும் கூடிய விரைவில் அமமுக என்ற கட்சி இருக்காது என்றும் கூறினார். தொண்டர்கள்,பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் பணத்தை மட்டும் வைத்து சசிகலா அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். சசிகலா பாரதீய ஜனதாவிற்கு வந்தால் வரவேற்போம் என்ற நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு பதிலளித்து அமைச்சர் சசிகலாவை பாரதிய ஜனதா கட்சியில் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.
காவல் துறையில் தலையீடு
திமுக அரசு பொறுப்பேற்று டெண்டர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கமிஷன் மட்டுமே உள்ளதாகவும் ஊழலில் திளைத்த ஆட்சி திமுக என்றும் ஊழலும் அராஜகம் தான் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதாகவும் கட்டிங்,கரப்ஷன், கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் அனைத்தும் சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். திமுக அமைச்சர்கள் பொது மக்களின் எண்ணங்களை முழுக்க முழுக்க உதாசீனப்படுத்துவது பொதுமக்களை மிகக் கேவலமாக நடத்துவதுதான் அவர்களின் வேலை என்றும் அடிப்பதும், உதாசீனப்படுத்துவது திமுகவினர் சர்வசாதாரணமாக செய்வார்கள் என்றும் ஜனநாயகத்தில் மக்கள் என்பவர்கள் இறுதி எஜமானர்கள் என்பதை மதிக்கும் பண்பு கூட திமுக அமைச்சர்களுக்கு இல்லை என்று விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல் துறையில் எந்த ஒரு தலையிடும் இல்லை என்றும் காவல் துறை தங்களது பணியை சுதந்திரமாக செய்தது என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்