உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாட உள்ளது. 

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். 

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயசந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை அதிமுக இன்று நாட உள்ளது. அப்போது, உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும். மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என முறையிட உள்ளனர்.

இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் டெல்லி சென்றுள்ளனர். ஓபிஎஸ்க்கு இருக்கும் இறுதி வாய்ப்பு தேர்தல் ஆணையம் ஒன்று மட்டும் தான். ஆனால், இபிஎஸ் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஓபிஎஸ் அரசியல் அஸ்தமனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.