இந்த சந்தேகம் எல்லாருடைய மனசிலும்தான் இருக்கு..! ஒபிஎஸ், இபிஎஸ் பதில் சொல்லட்டும்...! பழசை திரும்ப தோண்டும் செயல்தல...!
உடல் நலம் நன்றாக தேறிவந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஏன் எனவும் இதுகுறித்து பலருக்கு சந்தேகம் எழாமல் இல்லை எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சைப்பலனின்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே ஜெயலலிதாவை பார்க்க அவரது தோழி சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் மட்டுமே வெளியானது.
இதற்கு அப்போது அமைச்சர்களும் விசுவாசிகளும் கூட சப்பை கட்டு கட்டி வந்தனர். இதையடுத்து பன்னீர் தரப்புடன் எடப்பாடி அமைச்சரவை கூட்டு சேர்ந்ததும் டிடிவியையும் அவரது குடும்பத்தையும் கட்சியை விட்டு விலக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தரப்பு தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் போராடி வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் பிரச்சார நேரம் முடிவடைந்த நிலையில், ஜெ சிகிச்சை பெற்று வந்த வீடியோ ஒன்றை டிடிவி தரப்பு வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று ஜெ சிகிச்சை வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில், உடல் நலம் நன்றாக தேறிவந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஏன் எனவும் இதுகுறித்து பலருக்கு சந்தேகம் எழாமல் இல்லை எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் சந்தேகங்களுக்கு ஒபிஎஸ் இபிஎஸ் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.