தேர்தல் ஆணையரையே வளைத்து போட்ட கமல்.. களைகட்டும் கமல் பாலிடிக்ஸ்
அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கிவிட்டார் கமல். வரும் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார் கமல்.
இதற்கிடையே கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, ஆதரவைத் திரட்டுவது, தனது திட்டங்களை மக்களிடத்தில் சேர்ப்பது என பல பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அரசியலில் ஈடுபடப்போவதாக கூறும் ரஜினிகாந்த், அரசியல் ரீதியான மற்றும் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் தவிர்த்து வரும் நிலையில், அனைத்து பிரச்னைகள் குறித்தும் நெற்றியடி கருத்துகளை தெரிவித்துவருகிறார் கமல்.
காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கமல், தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம்தான் என்றாலும், கிடைக்கும் நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் எனவும் காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது என்பது அழுத்தமான தீர்ப்பு என்றும் கூறினார்.
இதையடுத்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த கமல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம் நலம் விசாரித்ததாக கமல் கூறினார்.
மேலும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த எந்தவிதமான சந்தேகமாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும், நல்ல உடல்நலத்துடன் இருந்திருந்தால், உங்கள் கட்சியில் நானும் இணைந்திருப்பேன் எனவும் சேஷன் தெரிவித்ததாக கமல் கூறினார்.