வரலாற்றில் 2வது முறையாக யாருமின்றி மதுரையில் நடந்த முக்கிய நிகழ்வு..!
மதுரை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாதான். அதிலும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மதுரை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாதான். அதிலும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்த திருவிழா பாதிக்கப் பட்டது.
இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோவில் விழாக்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. சிறப்புமிக்க விழாக்களை பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்தில் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் இன்றி நேற்று திக் விஜயம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி –சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்த நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் Madurai meenakshi என்ற யூடியூப் சேனலிலும், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும் கண்டு, அம்மனின் அருளை பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்க்கல் வழக்கமான தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும், அம்பாளின் திருக்கல்யாண கோலத்தை காண அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.