அமைச்சர்கள் பொய்யான தகவலைப் பரப்புவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது; ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்!
ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்றும், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த பொய்யைச் சொல்ல சொன்னது யார் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பதவியில் உள்ள அமைச்சர்கள் பொய்யான தகவல்களைப் பரப்புவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.