டெல்லி போராட்ட களத்தில் பீட்சா- பர்கர் சாப்பிடும் போலி விவசாயிகள்..? பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு..!
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் தான் உள்ளார்கள் என பா.ஜ.க. எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் தான் உள்ளார்கள் என பா.ஜ.க. எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து வந்துள்ள இந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளில் சிலர், தங்களது சொந்த ஊரில் இருந்து கிளம்புவதற்கு முன் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடன் எடுத்து செல்கிறோம் என தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் நலனுக்காக விவசாய சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் காலையில் தேநீர், மதிய உணவு மற்றும் இரவு நேர உணவு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், அங்கேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி மேற்கொள்வது, நெட் அமைத்து வாலிபால் விளையாடுவது போன்ற புத்துணர்வு பெறும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்காக இயங்கும் கழிவறைகள், குளிர்காலத்திற்கு தேவையான போர்வை, விரிப்புகள் மற்றும் கால்களுக்கு வேண்டிய காலுறைகள் போன்றவையும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த கோலார் தொகுதி பா.ஜ.க. எம்.பி. முனிசாமி இதுகுறித்து கூறுகையில், ’’டெல்லி எல்லைகளில் விவசாயிகள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பணம் கொடுத்து போராட்ட பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள். போலியான விவசாயிகள். பீட்சா, பர்கர் மற்றும் கே.எப்.சி. தயாரிப்புகளை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். போராட்ட களத்தில் ஜிம் அமைத்து இருக்கின்றனர். இந்த நாடகம் நிறுத்தப்பட வேண்டும்’’என கூறியுள்ளார்.