தீபாவிடமிருந்து ஓபிஎஸ்சிடம் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ மலரவன் - பேரதிர்ச்சியில் பேரவை...!
கோவை முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் தீபா பேரவையில் இருந்து விலகி ஒ.பி.எஸ் அணியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி இரும்பு கோட்டையாக திகழ்ந்தது. எந்த ஒரு விஷயத்திற்கும் முதலமைச்சர் மட்டுமே பதில் சொல்வார். மற்ற அமைச்சர்கள் பேருக்கு இருந்தால் போதும் என்ற நிலையை கட்டி காத்தார் ஜெயலலிதா.
ஆனால் அவரின் மறைவிற்கு பிறகு அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியது. புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என கனவா கண்டோம் என்ற நிலைமை தான் தமிழகத்தில் நிலவி வருகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும், ஒ.பி.எஸ் முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இது பெருவாரியான மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் பிடிக்கவில்லை என்றே கூறலாம்.
இதனால் சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்டு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்குள் இழுக்க அதிமுக ஆதரவாளர்கள் சிலர் முனைப்புடன் செயலபட்டு வந்தனர்.
அதில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் உள்ளிட்டோர் தீபாவுக்கு அதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவிக்கும் ஆசைபட்டு ஒ.பி.எஸ்ஸை வலுகட்டாயமாக பதவி விலக வைத்தார்.
இதையடுத்து ஒ.பி.எஸ்சும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். இதனால் அதிமுக மூன்று அணியாக பிரிந்ததது.
இதில் தீபா ஒ.பி.எஸ்ஸுடன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆதரவாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனி பேரவையை உருவாக்குவதாக அறிவித்தார் தீபா.
அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று பெயர் சூட்டியதோடு கொடியையும் அறிமுகபடுத்தினார். தீபாவின் இத்தனை செயல்களுக்கும் உறுதுணையாக இருந்த தீபாவின் கணவர் மாதவன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் சொதப்பலை ஏற்படுத்தி விட்டார்.
இதனால் பெரும் குழப்பங்களுக்கு நடுவே தீபா பேரவையே கதி கலங்கி நிற்கிறது. தீபா பேரவையில் இருக்கும் உச்சகட்ட குழப்பத்தினால் தீபா ஆதரவாளர்கள் சிறிது சிறிதாக பிரிந்து ஒ.பி.எஸ் அணியில் இணைந்தனர்.
தீபா பேரவையே காற்று வாங்க ஆரம்பித்ததால் எஞ்சிய தீபா ஆதரவாளர்களும் அணி மாறி வருகின்றனர். அதன்வரிசையில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் தற்போது ஒ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்.
முன்னதாக தீபா பேரவையில் இணைந்த போது தீபாவால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும், ஒரு குடும்பத்தால் அதிமுகவை கைபற்ற முடியாது, ஒட்டுமொத்த தொண்டர்களும் இணைந்ததுதான் அதிமுக. என தீபாவிற்கு ஒத்து ஊதி பேட்டியளித்தவர் இதே மலரவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!!