நான் நிரபராதி.. எனக்கு ஜாமீன் கொடுங்க.. உயர்நீதிமன்றத்தில் கதறும் அதிமுக முன்னாள் அமைச்சர்..!
எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை.
நடிகை அளித்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்;- எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனக்கு புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல, நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். ஏற்கனவே நான் திருமணமானவன் என்று அவருக்கு தெரியும்.
இந்நிலையில், எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கடன் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட பொழுது இந்த பிரச்சனை ஏற்பட்டது, மற்றபடி நான் நிரபராதி எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு அடுதத வாரம் விசாரணைக்கு வர உள்ளது