ஜாண் ஏறி முழம் சறுக்கும் தினகரன் - இன்று மாலை விசாரணை கன்ஃபார்ம்...!
இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தினகரன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவைடைகிறது. அந்த வகையில், தற்போது விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதனை அடுத்து, டிடிவி அணி அவசர அவசரமாக முட்டி மோதி தேர்தல் ஆணையத்தில் 1000 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது. மேலும், 3 நாட்களுக்கு அவகாசம் கோரி தினகரன் தரப்பு மனு அளித்தது. ஆனால் அதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதைதொடர்ந்து, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தது.
ஆனால் டிடிவி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அக்.31 ஆம் தேதிக்குள் சின்னம் யாருக்கு என உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
டிடிவி தினகரன் துவழாமல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு விசாரணை தேதியை தள்ளிவைக்க உத்தரவிடுமாறு மனு அளித்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் டிடிவி தினகரன் பீதியை அதிகப்படுத்தியது.
அதாவது அவர் அளித்த மனுவை தள்ளுபடி செய்து விசாரணையை இன்று மாலையே நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பலமுறை டிடிவி முயன்றும் இரட்டை இலை விவகாரத்தில் காலதாமதத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இரட்டை இலை விவகாரத்தில் காலதாமத படுத்த டிடிவி மேற்கொள்ளும் முயற்சிகள் இரட்டை இலை பரிபோய் விடுமோ என்ற பயமே வெளிப்படுகிறது.